சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.3 திருநெல்வாயில் அரத்துறை
பண் - இந்தளம்
கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங்
    கலந்துந் திவருந் நிவவின்ட கரைமேல்
நெல்வா யில்அரத் துறைநீ டுறையும்
    நிலவெண் மதிசூ டியநின் மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
    நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்
சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்
    தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
1
கறிமா மிளகும் மிகுவன் மரமும்
    மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நெறிவார் குழலா ரவர்காண நடஞ்செய்
    நெல்வா யில்அரத் துறைநின் மலனே
வறிதே நிலையாத இம்மண் ணுலகில்
    நரனர் கவகுத் தனைநா னிலையேன்
பொறிவா யிலிவ்வைந் தினையும் மவியப்
    பொருதுன் னடியே புகுஞ்சூழல் சொல்லே.
2
புற்றா டரவம் மரையார்த் துகந்தாய்
    புனிதா பொருவெள் விடையூர் தியினாய்
எற்றே ஒருகண் ணிலன்நின்னை யல்லால்
    நெல்வா யில்அரத் துறைநின் மலனே
மற்றேல் ஒருபற் றிலனெம் பெருமான்
    வண்டார் குழலாள் மங்கைபங் கினனே
அற்றார் பிறவிக் கடல்நீந்தி யேறி
    அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
3
கோடுயர் கோங்க லர்வேங் கையலர்
    மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நீடுயர் சோலை நெல்வா யிலரத்
    துறைநின் மலனே நினைவார் மனத்தாய்
ஓடு புனற்க ரையாம் இளமை
    உறங்கி விழித்தா லொக்குமிப் பிறவி
வாடி இருந்து வருந்தல் செய்யா
    தடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
4
உலவு முலகிற் றலைகற் பொழிய
    உயர்வே யோடிழி நிவவின் கரைமேல்
நிலவு மயிலா ரவர்தாம் பயிலும்
    நெல்வா யிலரத் துறைநின் மலனே
புலனைந் தும்மயங் கியகங் குழையப்
    பொருவே லோர்நமன் றமர்தாம் நலிய
அலமந்து மயங்கி அயர்வ தன்முன்
    அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
5
ஏலம் இலவங் கம்எழிற் கனகம்
    மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நீலம் மலர்ப்பொய் கையிலன் னம்மலி
    நெல்வா யிலரத் துறையாய் ஒருநெல்
வாலூன் றவருந் தும்முடம் பிதனை
    மகிழா தழகா வலந்தேன் இனியான்
ஆலந் நிழலில் அமர்ந்தாய் அமரா
    அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
6
சிகரம் முகத்திற் றிரளார் அகிலும்
    மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நிகரில் மயிலா ரவர்தாம் பயிலும்
    நெல்வா யிலரத் துறைநின் மலனே
மகரக் குழையாய் மணக்கோ லமதே
    பிணக்கோ லமதாம் பிறவி இதுதான்
அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய்
    அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
7
திண்டேர் நெடுவீ தியிலங் கையர்கோன்
    றிரள்தோ ளிருபஃ தும்நெரித் தருளி
நெண்டா டுநெடு வயல்சூழ் புறவின்
    நெல்வா யிலரத் துறைநின் மலனே
பண்டே மிகநான் செய்தபாக் கியத்தாற்
    பரஞ்சோதி நின்னா மம்பயிலப் பெற்றேன்
அண்டா வமரர்க் கமரர் பெருமான்
    அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
8
மாணா வுருவா கியோர்மண் ணளந்தான்
    மலர்மே லவன்நேடி யுங்காண் பரியாய்
நீணீள் முடிவா னவர்வந் திறைஞ்சும்
    நெல்வா யிலரத் துறைநின் மலனே
வாணார் நுதலார் வலைப்பட் டடியேன்
    பலவின் கனியீந் ததுபோல் வதன்முன்
ஆணோடு பெண்ணா முருவாகி நின்றாய்
    அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
9
நீரூ ரும்நெடு வயல்சூழ் புறவின்
    நெல்வா யிலரத் துறைநின் மலனைத்
தேரூர் நெடுவீதி நன்மா டமலி
    தென்னா வலர்கோ னடித்தொண்டு பண்ணி
ஆரூ ரனுரைத் தனநற் றமிழின்
    மிகுமாலை யோர்பத் திவைகற்று வல்லார்
காரூர் களிவண் டறையானை மன்ன
    ரவராகி யோர்விண் முழுதாள் பவரே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com